யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றை அறிய உதவும் இலக்கிய மூலாதாரங்கள்
வையாபுரி ஐயரால் தோற்றிவிக்கப்பட்ட வையாபாடல் என்னும் இலக்கியத்திலே யாழ்ப்பாண அரசினை தோற்றுவித்த சிங்கையாரியன் குலம் பற்றிய செய்திகள், யாழ்ப்பாண மாருதப் புரவீக வள்ளி, பற்றிய செய்திகளும் சமகால சமய சமூக அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்து 17ம் நூற்றாண்டின் தோற்றம் பெற்ற கைலாயமாலை என்ற இலக்கியத்திலே நல்லூரில் முன்னைய கைலாசநாதர் கோயில் அமைக்கப்பட்ட வரலாற்றை அறியமுடிகிறது. மேலும் மயில்வாகனம் புலவரால் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களின் தொடர்ச்சியான பட்டியல் பற்றியும், சாதனை பற்றியும் தொளிவாக அறிய முடிகிறது. இவற்றுடன் செகராஜசேகரம், பரராஜசேகரம் போன்ற வைத்திய நூல்களும் செகராஜ சேகர மாலை என்னும் சோதிடநூலிலும் அரசகேசரியின் ரகுவம்சத்திலும் சமகால அரசர்கள் மற்றும் சமூகம் பற்றிய பல செய்திகளை காண முடிகிறது.
மேலும் தட்சிணகைலாய மகாத்மீயம் என்னும் நூலில் இலங்கையில் காணப்படும் பல இந்துகோயில்களினுடைய சிறப்பினை திருக்கோணேஸ்வரத்தை மையமாகக் கொண்டு குறிப்பிடப்படுவதை காணமுடிகிறது. அத்துடன் யமுனாஏரி சட்டநாதர் ஆலயத்தின் சிறப்புக்களும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றினை பாளி சிங்கள இலக்கியங்கள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது மகாவம்சம், சூளவம்சம் போன்ற பாளி இலக்கியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகின்றன. இவ் இலக்கியங்களில் வட இலங்கை நாகதீபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சூளவம்சத்திலே ஆரியச்சக்கரவர்த்திகளின் படையெடுப்பு பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.
மேலும் சிங்கள நூல்களில் ஒன்றான இராஜவலிய என்ற நூலில் யாழ்ப்பாண அரசு தென்னிலங்கை நோக்கி விரிவு பெற்றமை பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. கோகில சந்தேசய என்னும் இலக்கியம் சப்புமல் குமாரவின் நிர்வாகம் பற்றியும் அவனது வெற்றியினையும் குறிப்பிடுகிறது. இவ் வெற்றியினை செலகினி சந்தேசய என்னும் இலக்கியமும் உறுதிசெய்கிறது. அத்துடன் இபின்பதூதாவின் ரெஹ்லா என்ற குறிப்பில் ஆரியச்சக்கரவர்த்திகளின் பெரிய வெளிநாட்டு வர்த்தகம் பற்றியும் பல கப்பல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு போர்த்துக்கேய ஆசிரியர்களின் இலங்கை வரலாறு, கீழை நாடுகளின் ஆன்மீக வெற்றி, இலங்கைத்தீவின் உலகியல் ஆன்மீகம் சார்பான வெற்றி போன்ற நூல்களில் நல்லூரில் இருந்த அரசமாளிகைகள், அரண்கள் போர்த்துக்கேயர் ஆட்சி, மதம் போன்ற செய்திகள் காணப்படுகின்றது. அத்துடன் ஒல்லாந்த ஆசிரியரின் இலங்கை பற்றிய உண்மையான துல்லியமான வர்ணனை என்னும் நூலிலிருந்தும் யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகிறது.
.https://youtu.be/51jtpOeL60E
எனவே யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய தொடர்ச்சியானதொரு வரலாற்றினை பறைசாற்றும் பொக்கிசமாக வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாணவைபவமாலை மற்றும் சோதிட வைத்திய நூல்கள் பாளி சிங்கள இலக்கியங்கள், போர்த்துக்கேய, ஒல்லாந்தரது நூல்கள், வெளிநாட்டார் குறிப்புக்கள் போன்ற இலக்கியங்கள் திகழ்கின்றன. என்று கூறின் அது மிகையாகாது.
உசாத்துணை நுல்கள்
1.பத்மநாதன்.சி(2011),'இலங்கையில் இந்து சமயம்',குமரன் புத்தக இல்லம்,2. கிருஸ்ணராஜா.செ (1999)'இலங்கை வரலாறு 'பாகம்-1,பிறைநிலா வெளியீடு
Comments
Post a Comment